Skip to content
Home » ஆடி 2ம் வெள்ளி……சமயபுரம், திருவானைக்காவலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

ஆடி 2ம் வெள்ளி……சமயபுரம், திருவானைக்காவலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

  • by Senthil

திருச்சி மாவட்டம் சமயபுரம்   மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். தமிழகத்தில் பழனிமுருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக பக்தர்கள் கூட்டமும், அதிக காணிக்கையும்  வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் போன்ற தினங்களிலும், அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களிலும் அம்மனை தரிசனம் செய்வதற்காகவும், நோய் நொடியில்லாத வாழ்க்கை அமையவும், செல்வ செழிப்போடு குடும்பம் விளங்கவும் வேண்டிக்கொண்டு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் பாத யாத்திரையாகவும்,  வாகனங்களிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

இன்று ஆடிமாத 2 வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் கட்டண வரிசையிலும் பொது தரிசன வரிசையிலும், நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன்

வணங்கினர். மேலும் நெய்தீபங்கள் ஏற்றியும், கோவிலின் நுழைவு வாயிலில் தேங்காய் உடைத்தும், ஏராளமான பெண்கள் வணங்கினர். சில பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து வந்தும், அக்னி சட்டி ஏந்தியும்,முடி காணிக்கை செலுத்தியும் அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். பக்தர் களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து  சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

பாதுகாப்பு பணியிலும், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும் சமயபுரம் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார், மாரியம்மன் கோவில் பணியாளர்களும் ஈடுபட்டனர். இதுபோல திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்  அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயிலிலும், உறையூர் வெக்காளியம்மன் கோயிலிலும் ஏராளமான  பக்தர்கள்  அம்மனுக்கு விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!