Skip to content
Home » அமெரிக்காவில் 2 மாதத்தில் மட்டும் 6,278 பேர் சுட்டுக்கொலை..

அமெரிக்காவில் 2 மாதத்தில் மட்டும் 6,278 பேர் சுட்டுக்கொலை..

  • by Senthil

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் என்பது சமீபகாலமாக சர்வசாதாரணமாக மாறிவிட்டது. கடந்த ஆண்டு மே மாதம் டெக்சாஸில் உள்ள பள்ளியில் சைக்கோ நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கிப் போட்டது. 18 வயது நிரம்பிய யார் வேண்டுமானாலும் துப்பாக்கியை வாங்கலாம் என்ற அந்நாட்டு சட்டமே இந்த சம்பவங்களுக்கு மூலக்காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்காவில் கடந்த ஆண்டில் (2022) மட்டும் துப்பாக்கி தொடர்பான வன்முறையில் 44,000 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும் துப்பாக்கிச் சூட்டால் 6,278 பேர் உயிரிழந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 116 பேர் துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பார்க் நகரில் கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி சீன புத்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். அப்போது 72 வயது முதியவர் ஒருவர் அங்கு துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 9 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு கலிபோர்னியா மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதிகபட்சமாக டெக்சாஸ், கலிபோர்னியா, பிளோரிடா, ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. தொடர்ந்து நடைபெறும் இத்தகைய துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் அமெரிக்க மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!