சென்னை காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி இந்தச் சிறுமிக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் உடனே சிறுமியை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கருவுற்று இருப்பதாகவும், பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமியின் தந்தை, மகளிடம் இது குறித்து விசாரித்துள்ளார். அப்போதுதான், கடந்த ஆண்டு பள்ளி விடுமுறையில் கோயம்பேட்டில் உள்ள தனது அத்தை வீட்டுக்குச் சென்ற இடத்தில் இது போன்று நடந்ததாக சிறுமி கூறியுள்ளார். மேலும், அத்தை தன்னை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாகவும், ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் 10 ஆயிரம் பணம் வாங்கிக் கொண்டு தன்னை அவருடன் அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்த ஆட்டோ ஓட்டுநர் தன்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கதறி அழுதிருக்கிறார் அந்தச் சிறுமி. உடனே சிறுமியின் தந்தை இதுகுறித்து கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் நேற்று புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் சிறுமியிடம் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது .
விடுமுறை தினத்தை கழிப்பதற்காக சொந்த அத்தை வீட்டிற்கு சென்ற சிறுமியிடம் பாலியல் தொழில் தொடர்பான ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார் அவரது அத்தை. ஒருநாள் திடீரென வேளச்சேரியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரிடம் 10 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு சிறுமியை அவருடன் அனுப்பி வைத்திருக்கிறார். அந்த ஆட்டோ ஓட்டுநர் சிறுமியை வேளச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து 5 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு பின் அவரது அத்தையிடம் அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு அவரது அத்தையின் தோழிகளான துர்கா மற்றும் காயத்ரி உதவியோடு சிறுமியை குன்றத்தூர் மற்றும் போரூர் பகுதிகளுக்கு அனுப்பி கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் இதனால் சிறுமி கருவுற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, தனது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவரது வாழ்க்கையைச் சீரழித்ததால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை தனது தங்கையிடம் சென்று இதுகுறித்து நியாயம் கேட்டு தங்கையை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சிறுமியின் அத்தை, கண்ணகி நகர் காவல் நிலையத்தில் தன்னை தாக்கிய அண்ணன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். உடனே கண்ணகி நகர் போலீசார் சிறுமியின் தந்தையை அழைத்து விசாரணை செய்தனர்.
அப்போது தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையைப் போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், போலீசார் இதைப் பொருட்படுத்தாமமல் அவரது தங்கை அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த 13 நாட்கள் சிறையில் இருந்து விட்டு நேற்று முன்தினம் சிறையில் இருந்து வெளியே வந்த சிறுமியின் தந்தை நேராக கோயம்பேடு துணை ஆணையரிடம் சென்று தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையையும், காவல்துறை தனக்கு செய்த அநீதி குறித்தும் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து கோயம்பேடு மகளிர் போலீசார் சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்திய அவரது அத்தை மற்றும் அவரது தோழிகளான துர்கா, காயத்ரி, ஆகியோர் மீது போக்சோவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர் உள்ளிட்டவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். அத்துடன் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு குறித்து தந்தை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத கண்ணகி நகர் போலீசாரிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.