கடலூர் மாவட்டம் பாலூர் அருகே உள்ளது பல்லவராயநத்தம் தொட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம், பட்டதாரியான இவர் அருகில் உள்ள பாலூர் கிராமத்தை சேர்ந்த வினிதா என்ற பெண்ணை பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்துவந்துள்ளார். இவர்களது காதல் நாளுக்கு நாள் வளர்ந்து வந்த நிலையில் நித்யானந்தம் மூன்றாம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து கடலூர், பண்ருட்டி, புதுச்சேரி என பல்வேறு மருத்துவமனைகளுக்கும் சென்று அவர் தனக்கு என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடிக்க முடியாமல் தவித்தார்.
இறுதியாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அவருக்கு இருதயம் 75% செயல் இழந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அறிந்த நித்யானந்தம் குடும்பத்தினர் துடிதுடித்து விட்டனர். காதலி வினிதாவும் என்ன செய்வது என்று தவித்தார். ஆனாலும் இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டதால் அந்த நித்தியானந்தத்தை திருமணம் செய்ய வினிதாவின் வீட்டில் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் காதலை கைவிட முடியாது எனக்கூறி வினிதா காதலனுக்கு மாற்று இருதயம் கிடைப்பதற்கான வழிவகைகளில் இறங்கினர்.
8 மாத காலம் காத்திருந்து அவர்களுக்கு மருத்துவமனையில் இருந்து வந்த தொலைபேசி ஆறுதலை கொடுத்தது. இருதயம் கிடைத்து விட்டதாகவும், மாற்று இருதய ஆபரேஷன் செய்யலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து நித்தியானந்தத்திற்கு மாற்று இருதய ஆபரேஷன் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இருவருக்கும் இரு வீட்டின் சம்மதத்துடன் திருமணமும் நடைபெற்றது. மகிழ்ச்சியான இவர்களது வாழ்க்கையில் கடந்த பிப்ரவரி மாதம் குழந்தையும் பெற்றெடுத்தார் வினிதா.
8 ஆண்டு காலம் காதலித்து 2 ஆண்டு காலம் நோயுடன் போராடிய தன்னுடைய காதலனை கணவனாக ஏற்ற அவர், தற்பொழுது இல்லற வாழ்வில் குழந்தையும் பெற்றுள்ளார்.தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தன்னை கைவிட்டு விடும்படி நித்தியானந்தா கேட்டுக் கொண்டதையும், ஆனால் அதனை மறுத்த அவர் தனக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நீ எந்த நிலையில் இருப்பாய் என்பதை உணர்ந்தே நான் உன்னுடன் இருக்கிறேன் எனக்கூறி தொடர்ந்து அவருக்கு உறுதுணையாக இருந்து தற்போது திருமணம் செய்து மற்றவர்களைப் போல தன்னுடைய வாழ்க்கை நடத்தி வருகிறார் வினிதா.