Skip to content
Home » “கனவு ஆசிரியர்” விருது பெற்ற திருச்சி ஆசிரியை உமா..

“கனவு ஆசிரியர்” விருது பெற்ற திருச்சி ஆசிரியை உமா..

ஆசிரியர்களுள்  தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை இனம்கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு ”கனவு ஆசிரியர் திட்டம்”  தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதற்காக கனவு ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்த தேர்வு சமீபத்தில் நடத்தப்பட்டது.  இதில் MCQ (Multiple choice questions) என்கிற முறையில் நடத்தப்பட்ட இந்த தேர்வில் தமிழகம் முழுவதிலும் உள்ள 8096 ஆசிரியர்கள் பங்கேற்றனர். முதற்கட்டமாக முதல்நிலை தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 1536 ஆசிரியர்கள்  நேரடி

செயல்விளக்க வகுப்பறை செயல்பாட்டினை மதிப்பிடுதல் – தேர்வில் கலந்து கொண்டனர். இதில் தேர்வு பெற்ற 964 ஆசிரியர்களின்  கற்பித்தல் அணுகுமுறை நுட்பங்கள், பாடப்பொருள்கள் அறிவு, அவர்களது பாடங்களில் பயன்படுத்தும் கற்பித்தல் உத்திகள் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டன.

மேற்கண்டுள்ள மூன்றுகட்ட தேர்வு முறைகளைத் தொடர்ந்து 75 % க்கும் அதிகமான மதிப்பெண் விழுக்காடு பெற்ற 380 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் 2023 ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத்தெரிவு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இந்த கனவு ஆசிரியர் தேர்வில் திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், மாநகராட்சி தொடக்கப்பள்ளி- இடைமலைப்பட்டி புதூர் பள்ளியின் ஆசிரியை சு.உமா  தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த கனவு ஆசிரியர் திட்டத்தில் தேர்வு பெற்ற வர்களில்  162 இடைநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 41 முதுகலை ஆசிரியர்கள் அடங்குவர். இவர்களின் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 55 ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். பிற ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றும் விருதும் வழங்கப்பட உள்ளது. மேலும், இவர்களது திறன் மேம்பாட்டிற்கு உரிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.  ஆசிரியை உமாவின் கணவர் மணிவண்ணபாரதி திருச்சியின் பிரபல குற்றவியல் வழக்கறிஞர் என்பது குறிப்பிடதக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!