கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த பள்ளி கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் (65). இவரது கணவர் முத்துச்சாமி (Late). கன்னியம்மாள் கடந்த 18ம் தேதி மாலை அதே பகுதியில் உள்ள காட்டுக்குள் வேப்பம்பழம் பறிக்க சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் தேடிச் சென்றனர்.
அப்போது காட்டுக்குள் உள்ள ஒரு வேப்பமரத்தின் கீழ் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். சம்பவம் குறித்து சிந்தாமணிப்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையை தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டியின் பக்கத்து வீட்டு பெண்மணி முருகாயி என்பவர் கொலையாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வழக்கு விசாரணையில் மூதாட்டி கன்னியம்மாளிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகாயி 2 பவுன் தங்க நகையை வாங்கிச் சென்று அடமானம் வைத்திருந்ததாகவும், அதை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் மூதாட்டி தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததால், ஆத்திரத்தில் அருவாளால் வெட்டி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.