Skip to content
Home » மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல்…. வாக்கு எண்ணிக்கை…..மம்தா கட்சி முன்னிலை

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல்…. வாக்கு எண்ணிக்கை…..மம்தா கட்சி முன்னிலை

  • by Senthil

மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 8-ந்தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. 22 ஜில்லா பரிஷத் 9,730 பஞ்சாயத்து சமிதி 63,229 கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட மொத்தம் 73,887 பதவிகளுக்கான ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் 2 லட்சத்து 6 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியதில் இருந்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாரதியஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கட்சி தொண்டர்கள் இடை யே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது. இதில் சிறுவன்ர்  உள்பட 15-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

இதனால் வாக்குப்பதிவு நாளில் வன்முறை சம்பவங்களை தடுக்க 70 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் 65 ஆயிரம் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனாலும் இதனை மீறி தேர்தல் நாளில் வரலாறு காணாத வகையில் கலவரம் மூண்டது. வாக்குச்சாவடிக்கு தீ வைப்பு, ஓட்டுச்சீட்டுகள் தீ வைத்து எரித்தல், வாக்குச் சாவடி சூறை , துப்பாக்கி சூடு, மறியல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ், பாரதியஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தொண்டர்கள் உள்ளிட்ட 20 பேர் பலியானார்கள்.

இந்த வன்முறைக்கு இடையிலேயும் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினார்கள். இதனால் சனிக்கிழமை நடந்த உள்ளாட்சி தேர்தலில் 80.71 சதவீத ஓட்டுகள் பதிவானது. வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட 19 மாவட்டங்களுக்கு உள்ளிட்ட 696 வாக்குச்சாவடி களில் நேற்று பலத்த பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு நடந்தது. சில இடங்களில் இந்த மறுவாக்குப்பதிவுக்கு எதிர்ப்பு கிளம்பிய போதிலும் 69.85 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் அனைத்தும் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எண்ணப்பட்டன.

22 மாவட்டங்களில் உள்ள 339 மையங்களில் இந்த ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது.  காலை நிலவரப்படி மேற்கு மெதினிபூரில் உள்ள 211 கிராம பஞ்சாயத்துகளில் 26 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. அவுராவுக்கு உட்பட்ட 157 பஞ்சாயத்துகளில் 29 இடங்களில் அக்கட்சி முன்னணி பெற்று உள்ளது.

இந்த தேர்தலில், மொத்தமுள்ள 63,229 கிராம பஞ்சாயத்து இடங்களில் 3,068 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. பா.ஜ.க. 151, காங்கிரஸ் 19 இடங்களில் முன்னிலையில் உள்ளன. ஹவுராவில் மொத்தமுள்ள 157 பஞ்சாயத்து இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 29 இடங்களில் முன்னிலையில் உள்ளன. பா.ஜ.க., இடது சாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை. இதேபோன்று, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 199 கிராம பஞ்சாயத்து இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 85-ல் முன்னிலை, இடது சாரி கட்சிகள் 20, பா.ஜ.க. 3 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளன. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னணியில் உள்ளனர். சில இடங்களில் மற்ற கட்சிகளை விட அக்கட்சி வேட்பாளர்கள் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி முகத்தில் உள்ளனர். பாரதிய ஜனதா, காங்கிரஸ். கம்யூனிஸ்டு கட்சிகள் பின் தங்கி உள்ளன. இது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.

தற்போது முன்னிலை நிலவரம் மட்டுமே வந்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை முழுமையாக முடிய இன்னும் 2 நாட்கள் ஆகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னணியில் உள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.பட்டாசுகள் வெடித்து அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!