Skip to content
Home » திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

  • by Senthil

திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் இன்று  காலை  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை  அமைச்சர் கே. என். நேரு தலைமை தாங்கினார்.  அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி, அன்பில் மகேஷ்பொய்யாமொழி.  தங்கம் தென்னரசு, மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர்  அமுதா வரவேற்றார்.  அதைத்தொடர்ந்து மகளிர் சுயஉதவிகுழுக்களின் செயலாக்கம் குறித்த குறும்படம் , தமிழக அரசின் ஓராண்டு சாதனை  குறும்படம் திரையிடப்பட்டது.

விழாவில் 2,764 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 78 கோடி வங்கி கடன் உதவிகளையும், 33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகளையும்,
8 வங்கிகளுக்கு மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளையும் முதல்வர் வழங்கினார். பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் ரூபாய் 238.41 கோடி செலவில் 5,635 முடிவுற்ற திட்ட பணிகளை  முதல்வர் திறந்து வைத்தார், ரூபாய் 308.29 கோடி மதிப்பிலான 5,931 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 22716 பயனாளிகளுக்கு ரூபாய் 79.06 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரைஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

திருச்சி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்கிறேன். உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க  தமிழகத்தில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி ஏற்படுத்தப்படும் என  சட்டமன்றத்தில் அறிவித்தேன். அதன்படி  திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய  ஒரு ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும். கல்வி, வேலை வாய்ப்பு அறிவுத்திறன்  ஆகியவற்றில் நாம் முன்னேறி இருந்தாலும், உலகத்தரம் வாய்ந்த வீரர்களையும் உருவாக்க வேண்டும். அதற்காகத்தான் திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு அமைச்சர்கள் நேரு, உதயநிதி ஆகியோருக்கு மகிழ்ச்சி தரும்.

இந்த திராவிட மாடல் அரசு மக்களுக்கு எல்லா உதவிகளயைும் செய்து வருகிறது.  மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபடுகிறது. பெண்களின் உயர்வுக்கு இந்த அரசு  முனைப்புடன் செயல்படுகிறது.   பெண்களுக்கு சொத்துரிமை, இட ஒதுக்கீடு, பொருளாராரத்தில் உயர மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அமைத்தது.

உயர் கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை,  பெண்களுக்கு பஸ்களில் இலவச பயணம்  ஆகியவை பெண்கள் உயர்வுக்காக திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் திட்டங்கள். இதனால் பெண்களின் ஆளுமை உயர்ந்துள்ளது.  மகளிர் சுயஉதவிக்குழுக்களை  கலைஞர் முதல்வராக இருக்கும்போது அமைத்தார்.

நான் ஊர் ஊராக சென்று பலமணி நேரம் நின்று விழாக்களில்  மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு  கடன் உதவிகள் வழங்கினேன். பல மணி நேரம் நிற்பதை பார்த்த பெண்கள் ஏன் நிற்கிறீர்கள், கால் வலிக்காதா, உட்காருங்கள் என்பார்கள்.   கடன் உதவிகள் பெறுவதன் மூலம் பெண்கள் முகத்தில் தெரியும் சிரிப்பை பார்த்தால் என்  கால்வலி போய்விடும் என்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!