Skip to content
Home » கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு….அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு….அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…

  • by Senthil

தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு பொது பாடத் திட்டத்தைக் கொண்டுவர உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு கல்லூரி பேராசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புதிய பாடத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தலைமை வகித்தார். துறைச் செயலர் ஏ.கார்த்திக் முன்னிலை வகித்தார்.

அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், சென்னை பல்கலை. துணைவேந்தர் எஸ்.கவுரி, மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் குமார் உட்பட மாநிலப் பல்கலை. துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில், பல்கலை.களில் பொதுப் பாடத்தி ட்டத்தை அமல்படுத்துவது, முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்கான நிகழ்ச்சிகள், காலி பணியிடங்களை நிரப்புவது குறித்தெல்லாம் விவாதிக்கப்பட்டது.பின்னர், அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பல்கலை., கல்லூரிகளில் பேச்சு, கட்டுரை, விநாடி-வினா, கவிதைப் போட்டிகள் நடத்தப்படும்.

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களில் 100 சதவீத பாடத் திட்டம் ஒரே வடிவில் இருக்கும். மற்ற பாடங்களில் 75 சதவீதம் ஒரே மாதிரியாக இருக்கும். மீதமுள்ள 25 சதவீத பாடங்களை, பல்கலை.கள் தங்களின் பாடவாரியக் குழுவின் மூலம் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான பாடத் திட்டம் ஒருமாதத்துக்கு முன்பு இறுதிசெய்து, பல்கலை.களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. சில இடங்களில் புதிய படிப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த படிப்புகளுக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்படும்.

இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொது பாடத் திட்டத்தால், பல்கலை. அதிகாரம் பாதிக்கப்படாது. அவர்களுடன் ஆலோசித்துதான், புதிய பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒரு கல்லூரியில் இருந்து மற்றொரு கல்லூரிக்கு மாறும் மாணவர்களுக்கும் பாடத்திட்டங்கள் எளிதாக இருக்கும். இதை அனைத்து பல்கலை. துணைவேந்தர்களும் ஏற்றுள்ளனர். பொதுபாடத் திட்டம் கல்வியின் தரத்தைஉயர்த்தும் வகையிலும், எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

பல்கலை.களில் பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் தகுதியானவர்களை நிரந்தரமாக நியமிக்க உள்ளோம்.

அனைத்து பல்கலை.களிலும் ஒரே மாதிரியான பணிநியமன முறையை கொண்டுவரும் வகையில், துணைவேந்தர்கள் தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட உள்ளது. அதேபோல, பேராசிரியர் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் ரூ.15 ஆயிரத்தில்  இருந்து ரூ.20 ஆயிரமாகவும், ரூ.20 ஆயிரத்தில் இருந்து, ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. பொதுப் பாடத்திட்டங்கள் நடப்பாண்டில் முதலாண்டு மாணவர்களுக்கு அமல்படுத்தப்பட்டு, தொடர்ந்து படிப்படியாக நடைமுறைக்கு வரும்.காலத்துக்கேற்ப பாடத் திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். இதில் எந்த சிக்கலும் இல்லை. எதிர்ப்புத் தெரிவிக்கும் தன்னாட்சிக் கல்லூரிகளையும் அழைத்துப் பேசுவோம்.

அனைத்து பல்கலை.களிலும்ஒரே பாடத் திட்டம் அமல்படுத்தப்படுவதால், ஒரே மாதிரியான தேர்வுமுறை, தேர்வுக் கட்டணம் அறிமுகப்படுத்தப்படும். இதுதவிர, அனைத்துபல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் சமமாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆகஸ்ட் மாதம் ஆலோசிக்கப்படும். நடப்பாண்டு `ஸ்லெட்’ தேர்வை நடத்துவதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 அமலாக்கத் துறை சோதனை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இதுபோன்ற சோதனைகளை நாங்கள் சந்தித்துள்ளோம். தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, சட்டரீதியாக அனைத்தையும் எதிர்கொள்வோம்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!