கேரள மாநிலம் மலப்புரம் அருகே ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது கார் மோதி கணவன், மனைவி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். கேரள மாநிலம் திருச்சூர் பன்னித்தடம் பகுதியைச் சேர்ந்தவர் ஷஹீத் (42). இவரது மனைவி ஷஹீனா (36). ஷஹீனாவின் உறவினர் ஜஹானா (26). நேற்று இவர்கள் 3 பேரும் காரில் கோழிக்கோட்டில் ஒரு உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்தனர். பின்னர் இரவில் ஊருக்குத் திரும்பினர். நேற்று நள்ளிரவில் மலப்புரம் தேஞ்சிப்பாலம் அருகே கார் வேகமாக சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுபாட்டை இழந்து ஓடிய கார் ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் கார் உருக்குலைந்தது. இந்த விபத்து குறித்து அறிந்ததும் போலீசாரும், அப்பகுதியை சேர்ந்தவர்களும் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மிகவும் சிரமப்பட்டுத் தான் 3 பேரையும் காரிலிருந்து மீட்டனர். உடனடியாக அவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இக்கோர விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
