இலங்கை கடற்படை தினமும் தமிழக மீனவர்களை தாக்கி கைது செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. ஆனால் இந்த பிரச்னையில் மத்திய அரசு இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை.
இலங்கை செல்லும் பிரதமர் மோடி, மீனவர் பிரச்சனை குறித்து அந்நாட்டு அரசுடன் பேச முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மீனவர்கள், படகுகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவருகிறார். கச்சத்தீவை திரும்பப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் இந்த தீர்மானத்தை முதல்வர் கொண்டு வருகிறார். இலங்கை படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட உள்ளது.