தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னையில் காலையில் வெயில் சுட்டெரிக்கிறது. மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் முகப்பேர், கோயம்பேடு, அம்பத்தூர், நெற்குன்றம், நொளம்பூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டியது. அது போல் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் நள்ளிரவில் மழை கொட்டியது.
தரமணி, நெமிலிச்சேரியில் ஒரே இரவில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ” தெற்கு ஆந்திர மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக” மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இதன் காரணமாக நள்ளிரவில் சென்னையில் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவினாலும், தாழ்வான சாலைகளில் மழைநீர் தேங்கியது. அதன் விளைவாக அதிகாலையில் பணிக்கு செல்வோர் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், கரூர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருப்பூர் கோவை,திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20.07.2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
21-07-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
19-07-2025 முதல் 20-07-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
21-07-2025 மற்றும் 22-07-2025: தமிழக-ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.