நேபாளத்தில் கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதையடுத்து, அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. மேலும், நாடு ராணுவம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவை சேர்ந்த 49 பேர் உத்தரபிரதேசம் வழியாக பஸ்சில் நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். கடந்த 9ம் தேதி நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவில் சாமிதரிசனம் செய்துவிட்டு இந்தியா திரும்பிக்கொண்டிருந்தனர். இந்தியாவின் எல்லை அருகே நேபாளத்தின் சொனாலி பகுதியில் சென்றபோது சுற்றுலா பஸ் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பஸ்சில் பயணித்த பயணிகளில் பெண்கள் உள்பட பலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, காயமடைந்த அனைவரும் காத்மண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், லேசான காயமடைந்தவர்கள் இந்திய தூதரகம் மூலம் சிறப்பு விமானம் மூலம் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனாலும், சில பயணிகளுக்கு தொடர்ந்து காத்மண்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சிகிச்சைக்குப்பின் விரைவில் இந்தியா திரும்புவார்கள் என இந்திய தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.