தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 20,378 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 16-ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சென்னை கிளாம்பாக்கத்தில் 10 முன்பதிவு மையங்கள் செயல்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக். 16 முதல் 19 வரை சென்னையிலிருந்து 14,268 சிறப்பு பஸ்கள், பிற ஊர்களில் இருந்து 6,110 சிறப்பு பஸ்கள் என 20,378 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தீபாவளி முடிந்து சென்னை உள்ளிட்ட ஊர்களுக்குத் திரும்ப 21-23 வரை 15,129 பஸ்கள் இயக்கப்படும். தீபாவளி சிறப்பு பஸ்களில் செல்ல 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தேவையை சமாளிக்க, கடந்த ஆண்டைப் போல இந்தாண்டும் 300 தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு தென் மாவட்டங்களுக்கு கார், சொந்த வாகனங்களில் செல்வோர் தாம்பரம் – பெருங்களத்தூர் வழியை தவிர்த்து, ஓ.எம்.ஆர் – கேளம்பாக்கம் – திருப்போரூர் வழியே போக்குவரத்து நெரிசலின்றி செல்லலாம். விடுமுறை முடிந்த பிறகு, மக்கள் சென்னை திரும்பும் நாட்களில் பயணிகள் வாகனத்தைத் தவிர்த்து, கனரக வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி மார்க்கமாக பஸ்கள் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, நெல்லைக்கு பஸ்கள் இயக்கப்படும். மாதவரத்தில் இருந்து ஆந்திரா, திருச்சி, சேலம், கும்பகோணத்திற்கு பஸ்கள் இயக்கப்படும்.
தீபாவளியை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கு TNSTC செயலி மற்றும் www.tnstc.in ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். போக்குவரத்து இயக்கம் குறித்து 94459 14436 என்ற தொலைபேசி எண்ணை எந்த நேரமும் அழைக்கலாம். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1800 425 6151 என்ற எண்ணில் ; 044-24749002, 044-2628 0445, 044-2628 1611 எண்களிலும் பயணிகள் புகார்களை தெரிவிக்கலாம்.