உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விசர்ஜீத் (22) என்ற வாலிபருக்கும், பீகாரைச் சேர்ந்த அமினா கட்டுன் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதல் இருந்து வந்துள்ளது. இருவரும் நெருக்கமாகப் பழகி வந்த நிலையில், கடந்த 24-ம் தேதி காதலியின் அழைப்பின் பேரில் விசர்ஜீத் டெல்லி சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்தபோது, விசர்ஜீத்திற்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட அதிர்ச்சித் தகவல் அமினாவிற்குத் தெரியவந்தது.
தன்னை இரண்டு ஆண்டுகளாக ஏமாற்றிய காதலனைப் பழிவாங்க அமினா ஒரு திட்டம் தீட்டினார். இரவு நேரத்தில் விசர்ஜீத்திற்கு மயக்க மருந்து கலந்த பாலைக் கொடுத்துள்ளார். அதனை அருந்திய விசர்ஜீத் ஆழ்ந்த மயக்கத்திற்குச் சென்றார். நள்ளிரவு 2.30 மணியளவில், அவர் அரை மயக்கத்தில் இருந்தபோது, அமினா கூர்மையான ஆயுதத்தால் விசர்ஜீத்தின் மர்ம உறுப்பை அறுத்துச் சிதைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
ரத்த வெள்ளத்தில் துடித்த விசர்ஜீத், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அமினாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விசாரணையில், பாதிக்கப்பட்ட விசர்ஜீத் ஒரு போலி டாக்டராகச் செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

