உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், குடும்பத் தகராறில் மனைவியின் மூக்கு மற்றும் கன்னத்தைக் கணவர் கடித்துக் குதறிய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஹமீர்பூர் மாவட்டம் பிர்ஹத் கிராமத்தைச் சேர்ந்த பூல்கான் – பானா தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் வெடித்தது. இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற பூல்கான், தனது மனைவி பானாவின் மூக்கு மற்றும் கன்னத்தை வெறித்தனமாகக் கடித்தார். இதில் பானாவின் மூக்குப் பகுதி சதை சிதைந்து ரத்தம் கொட்டியது.
வலியால் அலறிய பானாவை மீட்ட உறவினர்கள், அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு 10 தையல்கள் போடப்பட்டன. காயத்தின் தீவிரம் அதிகமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக ஜான்சியில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அவர் மாற்றப்பட்டார். பானாவின் முகத் தோற்றத்தைச் சீரமைக்க பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பானாவின் சகோதரர் அமரூதின் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக உள்ள பூல்கானைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அற்பக் காரணங்களுக்காக மனைவியின் மூக்கை கணவர் கடித்துத் துப்பிய இந்த விபரீதச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

