பேடிஎம் பேமென்ட் வங்கிக்கான உரிமத்தை (License) இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக ரத்து செய்துள்ளது. 1949-ம் ஆண்டு வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கோடும், வங்கி நிர்வாகத்திற்காக விதிக்கப்பட்ட விதிமுறைகளை அந்நிறுவனம் முறையாகப் பின்பற்றாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் விளக்கியுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதால், இனி வங்கி சார்ந்த எந்தவொரு பணிகளிலோ அல்லது வர்த்தக நடவடிக்கைகளிலோ அந்த நிறுவனம் ஈடுபடக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வங்கியை முழுமையாகக் கலைப்பதற்கான மனுவை விரைவில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க பேடிஎம் நிறுவனத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் உரிமமே ரத்து செய்யப்பட்டிருப்பது நிதித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
