கின்சோ: தெற்கு சீனாவில் பெய்த கனமழை மற்றும் புயலால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தெற்கு சீனாவின் குவாங்சி பிராந்தியத்தில் அமைந்துள்ள கின்சோ (Qinzhou) நகரில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, சாலைகள் வெள்ளக்காடாக மாறியதால் வாகனங்கள் நீரில் தத்தளித்தன.
இந்த நகரில் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவசர மீட்புக் குழுக்கள் துரிதமாக செயல்பட்டன. வெள்ளநீர் சூழ வீடுகளுக்குள் சிக்கியிருந்த நபர்களை மீட்க, மீட்பு குழுவினர் காற்றடைக்கப்பட்ட படகுகளை பயன்படுத்தினர். இது தொடர்பாக வெளியாகி இருக்கும் காணொளி காட்சிகளில் வெள்ளத்தில் சிக்கி இருக்கும் நபர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மீட்புப் பணியாளர்கள் மார்பளவு நீரில் நடந்து செல்வதும், கடும் வெள்ளப்பெருக்கிற்கு மத்தியில் தீயணைப்பு வீரர்கள் முதியவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குத் தூக்கிச் செல்வதும் பதிவாகி உள்ளது. கின்சோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதனிடையே ஆண்டின் இந்த நேரத்தில் இத்தகைய தீவிர மழைப்பொழிவு அசாதாரணமான ஒன்று என வானிலை ஆய்வாளர்கள் கூறி இருக்கிறார்கள்.வெறும் 8 முதல் 10 மணி நேரத்தில் சுமார் 273 மி.மீ மழை பதிவான நிலையில், கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்ததாக நிபுணர்கள் கூறி இருக்கிறர்கள்.
