கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த கொடூரமான மற்றும் மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மீது தமிழக அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தேமுதிக சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறி இருக்கிறார்.
மேலும் அந்த அறிக்கையில் பிரேமலதா கூறி இருப்பதாவது, குழந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அரசு இரும்புக்கரம் கொண்டு சட்டம் மற்றும் ஒழுங்கை காக்க வேண்டும். யாருக்கோ வருவதில்லை; யாருக்கும் வருவது என்பதை கருதில் கொண்டு உட்ச பட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
