வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த புதிய விலை உயர்வு இன்று ( ஜூன் 7) முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஆகிய பொதுத் துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், ஹோட்டல் உள்ளிட்ட வணிகப் பிரிவுக்கு, 19 கிலோ எடையிலும், சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.
இந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, உள்நாட்டில் மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன.
தமிழகத்தில், இம்மாதம் (ஜூன் 1ம் தேதி), வீட்டு காஸ் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படாமல், 928.50 ரூபாயாகவே இருந்தது. வணிக காஸ் சிலிண்டர் விலை, 46 ரூபாய் உயர்ந்து, 3,237 ரூபாயில் இருந்து, 3,283 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜூன் 7) நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.29 உயர்ந்துள்ளது. சென்னையில் ரூ.928.50 ஆக இருந்த சிலிண்டர் விலை 957.50 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது.
அதேபோல் டில்லியில் ரூ.942 ஆகவும், மும்பையில் ரூ.941.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.968 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர் விலை உயர்ந்து இருப்பது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
