தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமி, அங்குள்ள குருகுல பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறையையொட்டி, தனது பாட்டி வீட்டுக்கு 10 நாட்களுக்கு முன்பு வந்திருந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி மாலை, தனது பாட்டி பணிப்பெண்ணாக பணியாற்றி வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சிறுமி சென்றுள்ளார். அப்போது அதே கட்டிடத்தின் 2-வது மாடியில் வசித்து வந்த டிரைவர் முகமது கவுஸ் பாஷா (45) என்பவர் சிறுமியை, 4-வது மாடியில் உள்ள காலியாக இருந்த ஒரு வீட்டுக்குள் பலவந்தமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமி தப்பிக்க முயன்றதுடன், உரக்க கூச்சலிட்டார். இதனால் சம்பவம் வெளியில் தெரிந்துவிடும் என அஞ்சிய கவுஸ் பாஷா, சிறுமியை 4-வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பியோடினார். கீழே இருந்த மதில் சுவர் மீது விழுந்த சிறுமி பலத்த காயமடைந்து மயங்கினார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் முகமது கவுஸ் பாஷாவை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்
