அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான உறவு மீண்டும் மோசமடைந்துள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் பலவீனமடைந்த நிலையில், இரு நாடுகளும் மீண்டும் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள எச்சரிக்கை உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
“அமெரிக்கா மீண்டும் முழுமையான போரை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், ஈரான் என்ற நாடே இருக்காது” என்று டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில் கடுமையாக எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், “அமெரிக்கா தொடங்கிய பணியை முழுமையாக முடிக்க வேண்டிய நிலை வந்தால் அதையும் செய்ய தயங்காது” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த எச்சரிக்கைக்கு பின்னணியாக, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நடந்த தாக்குதல்கள் குறிப்பிடப்படுகின்றன. வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, ஈரானின் ஏவுகணை கிடங்குகள், ட்ரோன் தளங்கள் மற்றும் கடலோர ரேடார் மையங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு பதிலடியாக, அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மற்றும் அதன் கூட்டணி நாடுகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் முழுமையான போர் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்த மோதல் உலக பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றம் நீடிப்பதால், சர்வதேச சந்தைகளிலும் எண்ணெய் விலை உயர வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல உலக நாடுகள் இரு தரப்பும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவும், ஈரானும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், அடுத்த சில நாட்களில் நடைபெறும் சம்பவங்கள் உலக அரசியலின் போக்கையே மாற்றக்கூடும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
