கோவை மாநகர காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (PEW) போலீசார் நடத்திய சோதனையில், ஆம்புலன்ஸ் வாகனத்தில் 21 கிலோ கஞ்சா கடத்திய இருவரை கைது செய்து, கஞ்சாவையும் ஆம்புலன்ஸையும் பறிமுதல் செய்தனர்.
கோவை பீளமேட்டைச் சேர்ந்த மணிகண்டன் (28), சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரசின்னமருது (28) ஆகியோர், ஆந்திர மாநிலம் இச்சாபுரம்

பகுதியில் இருந்து 21 கிலோ கஞ்சாவை டாடா விங்கர் ஆம்புலன்ஸ் (TN 68 K 5443) மூலம் கோவைக்கு கடத்தி வந்துள்ளனர்.
ரயில், பேருந்து, லாரி போன்ற வாகனங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்துவதால் சிக்கிவிடுவோம் என்ற எண்ணத்தில், சுங்கச்சாவடிகளில் எளிதாக செல்லவும் போலீசாரின் கவனத்தில் சிக்காமல் இருக்கவும் ஆம்புலன்ஸை பயன்படுத்தி கஞ்சா கடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரகசிய தகவலின் பேரில் உக்கடம்–வாலாங்குளம் மேம்பாலம் அருகே போலீசார் வாகனத்தை

மடக்கிப் பிடித்து, இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது ஏற்கனவே போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு இருப்பதும், வீரசின்னமருது மீது திருட்டு வழக்கு இருப்பதும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும், மணிகண்டன் இதற்கு முன்பு எத்தனை முறை கஞ்சா கடத்தியுள்ளார், யாருக்கெல்லாம் விற்பனை செய்துள்ளார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
