பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா காரை கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் முருகதாஸ் (53). இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், சோபனா (24) என்ற மகளும், முகேஷ் (22) மகனும் உள்ளனர். சோபனாவிற்கு பிறந்த பொழுது இருந்தே, உடல் உபாதை கழிப்பதில் பிரச்சனையால் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இது தொடர்பாக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த ஒரு வார காலமாக சோபனா வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தவர் நேற்றிரவு சுமார் 10 மணி அளவில் வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகள் தூக்கிட்டு இறந்த துக்கம் தாங்க முடியாத முருகதாசும் இன்று அதிகாலை அவரது மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து மகளும், தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
