பாட்னா: கோஷி ஆற்றில் கிடைக்கும் வழக்கத்திற்கு மாறான மீன்களை சாப்பிட வேண்டாம் என பீகார் அரசு, தனது மாநில மக்களை அறிவுறுத்தி உள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக, பீகாரில் பாயும் கோஷி மற்றும் கண்டக் ஆறுகளில் வழக்கத்திற்கு மாறான மற்றும் புதிய வகையான மீன்கள் அடித்து வரப்பட்டுள்ளன. இந்த மீன்களைப் பிடித்து சாப்பிடவோ, விற்கவோ அல்லது வாங்கவோ வேண்டாம் என்று பீகார் மாநிலத்தின் கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சகம், மாநில மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பேரிடர் மற்றும் பெய்த கனமழை காரணமாக திரிசூலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள நீர், பீகாரின் வடக்கு பகுதியில் உள்ள கோஷி மற்றும் கண்டக் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் வெள்ள நீரில் வழக்கமாக இப்பகுதிகளில் காணப்படாத விசித்திரமான, ராட்சத மீன்கள் அடித்து வரப்பட்டுள்ளன.
கோஷி ஆற்றின் வெள்ள நீரில் சமீபத்தில் அடித்து வரப்பட்ட இந்த புதிய வகை மீன்களைச் சாப்பிட்ட சிலர் திடீரென நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அவசர எச்சரிக்கை வெளியிட்டுள்ள பீகார் அரசு, வெள்ள நீர் வெவ்வேறு பகுதிகளைக் கடந்து வருவதால் சாக்கடை கழிவுகள், இறந்த விலங்குகளின் உடல்கள் மற்றும் பிற அசுத்தங்களுடன் இந்த மீன்கள் தொடர்பு கொண்டிருக்கலாம். இதனால் அவற்றில் ஆபத்தான பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை போன்ற நோய்த்தொற்று கிருமிகள் பரவியிருக்க அதிக வாய்ப்புள்ளது என எச்சரித்து உள்ளது.
