கோவை,பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இங்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம், கவியருவி, பூங்கா, அறிவு திருக்கோயில் உள்ளிட்டவைகள் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாகவும் இப்பகுதி உள்ளது.
இந்நிலையில் கோட்டூர் பேரூராட்சி சார்பில் ஆழியார் அணை பகுதியில் படகு சவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. படகு சவாரி செய்ய முன்பு முப்பது ரூபாய் கட்டணத்தில் இருந்த படகு சவாரி தற்பொழுது நபர் ஒன்றுக்கு 150, எனவும் சிறுவர்களுக்கு தலா 100 ரூ எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆழியார் அணை பகுதியில் ஒரு முறை சுற்றிவர பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வரை ஆகும்.தற்போது ஆழியார் அணையில் தண்ணீர் குறைந்துள்ளதால் அணையின் சிறிய பகுதி மட்டுமே படகு மூலம் சுற்றிவர முடியும்.ஒருமுறை அணை பகுதியை
சுற்றிவர படகு ஒன்றுக்கு 15 நபர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் படகு சவாரி செய்ய நபர் ஒன்றுக்கு 150 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பது அதிகம் என சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்வதை தவிர்த்து வருகின்றனர்.
சராசரியாக சிறியவர்கள், பெரியவர்கள் என நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு 15 நிமிடங்கள் சவாரி செய்ய 500 கட்டணம் செலுத்தியே பயணம் செய்ய முடியும். இதனால் ஆழியார் அணையில் படகு சவாரி செய்ய ஆள் இல்லாமல் அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. வரும் நாட்களில் தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதால் ஆழியார் அணை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய ஏதுவாக படகு சவாரிக்கான கட்டணத்தை கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் குறைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.