திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் 18 வயதான திவாகர். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தனது மோட்டார் பைக்கில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த அரசு பஸ் மோட்டார் பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த திவாகர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.