அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தோடு, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி அறிவித்தார். இந்த திட்டம் இன்று அமலுக்கு வந்தது. சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை அன்று கலெக்டர்கள் தலைமையில் இந்த முகாம் நடைபெறும்.
இன்று தொடங்கிய ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் மாவட்ட கலெக்டர்கள் ஏதாவது ஒரு கிராமத்தை தேர்வு செய்து நேரடியாக அந்த கிராமத்துக்கு சென்று 24 மணி நேரம் அங்கு தங்கி மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை தீர்த்து வைப்பார்கள்.
இந்த திட்டத்தின்படி கலெக்டர்கள் இன்றைய தினம் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை கிராமத்தில் தங்கியிருப்பர். அந்த கிராமத்தில் தங்கி இருந்து பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு
மேற்கொள்ள உள்ளனர். கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் கலெக்டர்கள் மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண உள்ளனர். மேலும், கலெக்டர்கள் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி இன்று காலை திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் காலையில் துறையூர் தாலுகா கண்ணனூர் புறப்பட்டு சென்றார். அங்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிரடி ஆய்வு நடத்தினார். பின்னர் அங்குள்ள அரசினர் பிற்பட்டோர் வகுப்பினர் மாணவர் விடுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு எத்தனை மாணவர்கள் தங்கி உள்ளனர். மாணவர்களுக்கான உணவுப்பொருட்கள் இருப்பு சரியாக உள்ளதா, உணவுப்பொருட்கள் தரமாக சப்ளை செய்யப்படுகிறதா என்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். விடுதி பொறுப்பாளரிடம் உள்ள கணக்குகளையும் இருப்பையும் சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்தார். பின்னர் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். சில வகுப்புகளுக்கு நேரடியாக சென்று மாணவர்களிடம் கேள்விகள் கேட்டார். பின்னர் பள்ளி வகுப்பறைகள், மாணவர்கள் எண்ணிக்கை குறித்து தலைமை ஆசிரியரிடம் விசாரித்தார்.