இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நாட்டின் இளந்தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் ஒரு புதிய பிரம்மாண்ட திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இதிட்டத்தின் கீழ், புதிதாக வேலைக்குச் சேர்ந்து வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) இணையும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு தலா 15,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னை மணலி பகுதியில் அமைந்துள்ள எம்.எஃப்.எல் (MFL) தொழிற்சாலையில் புதிய ஊழியர்களுக்கு முதற்கட்ட நிதி ஆணைகள் வழங்கப்பட்டு, இத்திட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் இதற்கான பயன்கள் விநியோகிக்கப்படத் தொடங்கியுள்ளன. சென்னை மணலி மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் (MFL) தொழிற்சாலையில் இதற்கான பிரத்யேக நிகழ்வு நடைபெற்றது. இதில், புதிதாகப் பணியில் சேர்ந்த தகுதியுள்ள இளம் ஊழியர்களுக்கு முதற்கட்டமாக 7,500 ரூபாய்க்கான வைப்பு நிதி ஆணை நேரடியாக வழங்கப்பட்டது. சென்னை மற்றும் புதுச்சேரி மண்டலங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மட்டும் 59,000க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தின் மூலம் நேரடியாகப் பயன்பெறவுள்ளனர் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மண்டல ஆணையர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
