Skip to content

தந்தையுடன் போட்டோ எடுத்த முதல்வர் ஸ்டாலின்- திமுக நிர்வாகி மகிழ்ச்சி

தனது தந்தை புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பபடுவதாக மகன் வைத்த கோரிக்கையை ஏற்று மூத்த திமுக தொண்டரை நேரில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை தனித்தனியாக ஒன் டூ  ஒன் சந்தித்து வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமை ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்த போது தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தனது அப்பா முத்துவேல் திமுகவின் மூத்த முன்னோடியாக உள்ளார். அவர் உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறார் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். உடனடியாக அவரை தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியதோடு சென்னைக்கு வருமாறு கூறினார். இதை தொடர்ந்து இன்று அண்ணா அறிவாலயத்தில் முத்துவேலை சந்தித்து கலந்துரையாடி கலைஞர் சிலையை பரிசளித்து அவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முத்துவேல், அண்ணா காலத்தில் இருந்தே திமுகவில் உறுப்பினராக இருப்பதாகவும் தற்போது எனது ஆசையை அறிந்தவுடன் தொலைபேசியில் என்னோடு பேசியது மட்டுமல்லாமல் நேரில் வரவழைத்து என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட தருணம் மிகவும் நெகிழ்ச்சியான தருணம் என தெரிவித்தார்.


தனது தந்தை புகைப்படம் எடுத்துக் கொள்வதாக தெரிவித்த உடனே வரவழைத்து முதலமைச்சர் புகைப்படம் எடுத்துக் கொடுத்தார். இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகும், இதுபோன்று ஒவ்வொரு நிர்வாகிகள் என்று கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய முதலமைச்சராக இருக்கிறார் என்றும் இதனால் நிர்வாகிகள் உத்வேகம் அடைந்து இருப்பதாகவும் அவர் கூறினார். உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் முதலமைச்சர் நிர்வாகிகளை தனித் தனியாக சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவது நிர்வாகிகளிடேயே உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

error: Content is protected !!