தொழிலாளர் தினமான மே தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த முதல்வர் சிவப்பு சட்டை அணிந்து வந்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
உருண்டோடுகின்ற ரெயிலை ஓட்டக்கூடியவர் ஒரு தொழிலாளி தான். இழையை நூற்று நல்லாடையை நெய்பவரும் தொழிலாளி தான். இரும்பு காய்ச்சி உருக்குபவனும் தொழிலாளி தான். உழுது நன்செய் பயிரிடுபவரும் தொழிலாளி தான். அந்த தொழிலாளர்களுடைய இனம் வகுந்து கொண்டாடக்கூடிய திருநாள் தான் மே தினம் என்று அறிஞர் அண்ணா சுட்டிக்காட்டினார்.
தொழிலாளர்கள் தங்கள் உரிமையை வென்றெடுத்த மே நாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பெருகி வருகிறது. திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் என்று பெரியார் குறிப்பிட்டு காட்டினார். மே 1ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளித்தவர் பேரறிஞர் அண்ணா. அதன் பிறகு மே 1 விடுமுறையை சட்டமாக்கி தந்தார் கலைஞர் .
தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து திமுக அரசு செயல்பட்டு வருகிறது. திமுக அரசு தொழிலாளர் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 28 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2400 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளோம்
தமிழ்நாட்டில் முதலீட்டு செய்யும் நிறுவனங்களிடம் கையெழுத்தாகும்போது எவ்வளவு பேருக்கு வேலை கிடைக்கும் என்றுதான் முதலில் கேட்பேன். இது சாமானியர்களின் ஆட்சி . உங்களுடன் நிற்கும் உங்களின் ஒருவன் தான் நான்; திமுக ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் நிறைவு செய்து 5 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்க உள்ளோம். உங்களுக்காக உழைக்கிற திமுக ஆட்சிக்கு தொழிலாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.