தவெக அரசின் முதல் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய அதிமுக எம்எல்ஏ மற்றும் முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு கொண்டு வந்த பல திட்டங்களுக்கு தற்போதைய தவெக அரசு பெயரை மாற்றி இருக்கிறது.
இதுவா நீங்கள் சொன்ன மாற்றம்.!! புதிய திட்டங்களை கூட கொண்டு வர கூட முடியவில்லையா ! என்று கேள்வி எழுப்பினார். மாற்றம் கொண்டு வருவோம் என ஆட்சிக்கு வந்துள்ள தவெக ஆட்சியில், மாற்றங்கள் எதுவுமே இதுவரை தென்படவில்லை. பல திட்டங்களுக்கு ‘வெற்றி’ என்ற அடைமொழியை கொடுத்துள்ளீர்கள்;மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த நீங்கள் மக்கள் பிரச்னையை தீர்க்க புதிய யோசனைகூடவா உங்களிடம் தென்படவில்லை? என்றும் வினவினார்.
பேசாமல் இருப்பது நல்லது தான்; ஆனால் சில நேரங்களில் பேசினால் தான் நமக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் கிடைக்கும் என்றார். தமிழகம் முழுவதும் இயங்கி கொண்டிருக்கும் பழைய பேருந்துகளை விரைவில் மாற்றுங்கள் என்றார். அதற்கு போக்குவரத்து அமைச்சர் பார்த்திபன் எழுந்து, தமிழகம் முழுவதும் இயங்கும் பஸ்கள் ஏசி பஸ்ஸாக இருக்க வேண்டுமென்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அதற்கு சிரித்தபடி பதிலளித்த எடப்பாடி, தமிழ்நாடு முழுவதும் ஏ.சி. பேருந்து என்பது கேட்க நன்றாக உள்ளது; அமல்படுத்துவது எப்போது? என்றார். அதே போல நீங்கள் அனைத்தையும் ஏசி பேருந்தாக மாற்ற வேண்டும் என்பதில்லை, சாதாரண பேருந்துகளை புதிதாக வாங்கி இயக்கினாலே மக்கள் பாராட்டுவார்கள் என்றார். விவசாயிகளின் பயிர் கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் EPS வலியுறுத்தினார். “தவெக ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதத்தில் |ரூ.20,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகள் முடியும்போது ரூ.20 லட்சம் கோடியாக கடன் இருக்கும் என்றும் குறிப்பிட்டார். விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும், அப்படி செய்தால் சுத்தமான தண்ணீர் கிடைக்கும் என்றார்.
