சென்னை: நுங்கம்பாக்கத்தில் தனியார் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்ற செவிலியரை வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்த கால் சென்டர் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் செவிலியராக ராணி(25)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது தோழியுடன் தங்கி வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் அதிகாலை வேலைக்கு ராணி சென்று கொண்டிருந்தார். நுங்கம்பாக்கம் ஆவின் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்ற போது, பின்னால் பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், முகவரி கேட்பது போல் ராணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பி ஓடிவிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத ராணி உடனே ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, அயனாவரம் பகுதியை ேசர்ந்த தியானேஷ்வர்(25) என்றும், இவர் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு தனியார் கால் சென்டர் ஒன்றில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இவன் மீது குற்ற வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
உடனே, போலீசார் தியானேஷ்வர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவனிடம் இருந்து குற்றத்திற்கு பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
