Skip to content

அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை.. தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

தன்னை இளைய காமராஜர் என்று  அழைக்க வேண்டாம் என தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண் பெற்ற  மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் , கல்வி விருந்து மற்றும் ஊக்கத்தொகை வழங்கி வருகிறார்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி விருந்து வழங்கப்பட்டு வரும் நிலையில், முன்றாவது ஆண்டாக இந்த ஆண்டு விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி  இந்தாண்டு முதற்கட்டமாக  88 தொகுதிகளுக்கு  கடந்த மாதம் 30ம் தேதியும், இரண்டாவது கட்டமாக 84 தொகுதிகளுக்கு ஜூன் 4ம் தேதியும் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு கல்வி விருதுகள் வழங்கப்படது.

விஜய்

இந்நிலையில் இன்று மூன்றாவது கட்டமாக மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில்  கல்வி விருது வழங்கும் விழா தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பேசிய  தவெக தலைவர் விஜய், “எல்லோருக்கும் வணக்கம்.. நேற்று ( ஜூன் 12) குஜராத்தில் மிகப்பெரிய சோகமான விமான விபத்து நிகந்துள்ளது. அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் போது மனம் பதறுகிறது. அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை.. அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

தொடர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பிறகு  விழாவில் பேசிய விஜய், “தன்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம். கல்வி விருது வழங்கும் விழாவில் 2026 தேர்தலை பற்றியும் பேச வேண்டாம்.  பள்ளி மற்றும் ஆசிரியர்கள் பற்றி மட்டுமே மேடையில் பேச வேண்டும்.   எல்லோரும் ரொம்ப தூரத்திலிருந்து வந்திருக்கிறீர்கள். அனைவரையும் தனித்தனியே சந்திக்கிறேன். யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;  பேச்சை மட்டும் குறைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

error: Content is protected !!