Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டிற்குள் புகுந்து மேயருக்கு கொலை மிரட்டல்- 2 பேர் கைது

நெல்லை டவுனில் மேயர் ராமகிருஷ்ணணின் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாநகராட்சி மேயர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், டவுன் வேணுவன குமாரர் கோயில் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் மாநகராட்சி பணிகளை முடித்த பிறகு அங்கிருந்து காரில் புறப்பட்டு தனது உதவியாளர்களுடன் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். டவுன் மெயின் ரோட்டில் காரை விட்டு இறங்கிய மேயர் ராமகிருஷ்ணன், அங்கிருந்து அருகேயுள்ள வேணுவனகுமாரர் கோயில் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அதேவேளையில் அவரது வீட்டுக்கு திரும்பி செல்லும் வழியில் மொபட்டை கீழே சாய்த்த நிலையில் இருவர் நின்றுகொண்டிருந்தனர். இந்நிலையில் மேயர் ராமகிருஷ்ணன் தனது வீட்டிற்குள் உதவியாளர்களுடன் சென்ற பிறகு மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவரும், அவர்களோடு சேர்ந்து கொண்டார்.

மேயர் ராமகிருஷ்ணன் வீட்டுக்குள் மர்மநபர்கள் திடீரென அத்துமீறி நுழைந்தனர். இதைப் பார்த்த மேயரின் உறவினரான பெண் ஒருவர் நீங்கள் யார் என கேட்டுள்ளார். அப்போது அவர்கள் மேயரை கொலை செய்ய வந்ததாகக் கூறினர். இதனால் பதறிய அப்பெண் கூச்சலிட்டுள்ளார். அதை கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்ததை கண்ட மர்ம நபர்கள் இரு பைக்குகளில் ஏறி தப்பிச்சென்றனர். பின்னர் இதுகுறித்து மேயர் ராமகிருஷ்ணன் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மேயர் வீடு மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். தகவல் அறிந்து நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்களும் மேயர் வீட்டுக்கு திரண்டு வந்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தியதில் 2 பேர் சிக்கினர். சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து டவுன் ஜாமியா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகம்மது அப்ஸல்(25), அதே தெருவை சேர்ந்த அப்துல் அஜிஸ்(23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மாநகராட்சி பணிகள் தொடர்பாக 2 பேரும் நேரில் வந்து மிரட்டினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!