திருச்சி: நம்பர் டோல் கேட் அருகே எல்.ஐ.சி. பெண் முகவரின் காரை காவலர் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நம்பர் டோல் கேட் பகுதியில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். கணவரை இழந்த இவர் தனது மகள், மகனுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் எல்ஐசி முகவராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் கொள்ளிடம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சத்தியராஜ் என்பவரை காப்பீடு எடுக்குமாறு பெண் பேசியுள்ளார். எல்ஐசி பெண் முகவர் புவனேஸ்வரியிடம் தவறான நோக்கத்துடன் சத்தியராஜ் பேசியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து காவலரின் அழைப்பை தொடர்ந்து புவனேஸ்வரி நிராகரித்து வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த காவலர் நேற்று இரவு புவனேஸ்வரி வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் கண்ணாடியை உடைத்து தீயிட்டு கொளுத்தியுள்ளார். தொடர்ந்து எல்ஐசி பெண் முகவர் புவனேஸ்வரி அளித்த புகாரில் காவலர் சத்தியராஜ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
