மும்பை: தங்களை முதிய வயதில் பராமரிக்கத் தவறும் பிள்ளைகளுக்கு தாங்கள் வழங்கிய சொத்துகளைப் பெற்றோர்கள் சட்டப்பூர்வமாகத் திரும்பப் பெறலாம் என்று பாம்பே உயர் நீதிமன்றம் (Bombay High Court) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பெற்றோர் சொந்தமாகப் பொருளாதார வசதியுடன் இருந்தாலும் கூட, பிள்ளைகள் அவர்களைப் பராமரிக்கத் தவறினால் அவர்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட சொத்து பரிமாற்றத்தை (Gift/Settlement Deed) ரத்து செய்ய முடியும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
சமீப காலங்களாகப் பெற்றோர்களை வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகள் கைவிடுவதும், முதியோர் இல்லங்களில் சேர்ப்பதும் சமூகத்தில் பெருமளவில் அதிகரித்து வருகிறது. தங்களின் வாழ்நாள் கால உழைப்பை நம்பி பிள்ளைகளுக்குச் சொத்துகளை மாற்றிக் கொடுக்கும் முதியோர்கள், பின்னர் அதே பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஏமாற்றமடைகின்றனர். இத்தகைய முதியோர்களின் வாழ்வாதாரத்தையும் கண்ணியத்தையும் காக்கும் பொருட்டு, மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007’-ன் கீழ் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
சொத்து தகராறு மற்றும் முதியோர் பராமரிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த பாம்பே உயர் நீதிமன்றம், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான சொத்து பரிமாற்றம் குறித்த முக்கிய வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. “பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு அன்பின் அடிப்படையில் சொத்துகளை மாற்றிக் கொடுக்கும் போது, முதிய வயதில் தங்களைப் பராமரிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இயல்பானதாகும்.
ஒருவேளை, பெற்றோர்கள் தங்களுக்குத் தேவையான பொருளாதார வசதிகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் கூட, பிள்ளைகள் என்ற கடமையில் இருந்து தவறி அவர்களைப் பராமரிக்காமல் கைவிட்டால், அந்தச் சொத்து பரிமாற்றப் பத்திரத்தை (Deed) முழுமையாக ரத்து செய்துவிட்டு, சொத்தைத் திரும்பப் பெறும் உரிமை பெற்றோருக்கு உண்டு” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்தத் தீர்ப்பை இணையவாசிகள் (நெட்டிசன்கள்) பலரும் வரவேற்றுப் பாராட்டி வருகின்றனர்.
