அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி மூலம், திருச்சிக்கு சுற்றுலா செல்வதற்காக, அப்பள்ளியில் பயிலக்கூடிய ஆசிரியர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர், பள்ளி வேனில் இன்று காலை புறப்பட்டு சென்றனர். பள்ளிக்கு சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மனகெதி சுங்கச்சாவடி அருகே வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி வேன், சுங்கச்சாவடி தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு பெண் ஆசிரியர், 7 பெண் குழந்தைகள் உள்ளிட்ட 11 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் வேனில் இருந்த ஆசிரியர்கள் காயமடைந்த குழந்தைகளை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு பொது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து கேள்விப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், ஜெயங்கொண்டம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் திரண்டனர். இதனால் மருத்துவமனை வளாகமே பரபரப்பாக காணப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பள்ளி வேன் விபத்துக்குள்ளானதன் காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
