திருச்சியில் பள்ளி சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை (ஓரினச் சேர்க்கை ) செய்த
குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.15,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 25.01.2023-ந்தேதி இரவு திருச்சி மாநகர் உறையூர் ராமலிங்கா நகர் அருகில் கடைக்கு சென்ற சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை (ஒரினச் சேர்க்கை) செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் விசாரணை செய்ததில் புத்தூர், களத்துமேட்டுத் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 24) என்பவரை கைது செய்து, குற்றவாளி மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் புலன் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு, கடந்த 01.04.2023-ந்தேதி மேற்படி எதிரி வெங்கடேஷ் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள்.
மேற்படி வழக்கில் திருச்சி அமர்வு நீதிபதி, மகிளா நீதிமன்றம் குற்றவாளி வெங்கடேஷ் என்பவருக்கு 5 (m) r/w 6 (1) of POCSO Act 2012 -ன்படி 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.15,000/-அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர்படுத்தியும், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு தண்டனை பெற்றுத்தந்த ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி வெகுவாக பாரட்டினார்கள்.
