Skip to content

சபாஷ் சரியான போட்டி–கோப்பை யாருக்கு கிடைத்தாலும் ச்நதோஷம் தான்

சபாஷ் சரியான போட்டி–கோப்பை யாருக்கு கிடைத்தாலும் சந்தோஷம் தான்

 

இந்திய  கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல,   உலகம் முழுவதும் கிரிக்கெட் ஆடும்  15க்கும் மேற்பட்ட நாடுகளின்  கோடைகால திருவிழாவாக மாறிவிட்டது  ஐபிஎல்.  தொடா்ந்து 18 வருடங்களாக இந்த போட்டி  நடந்து வருகிறது.   ஒவ்வொரு வருடமும் இந்த போட்டி ரசிகர்களிடம் கூடுதல்   ஆதரவை பெற்று வருகிறது.

இந்தியாவில் தேர்தல் நடந்த காலங்களில்  சில ஐபிஎல்  போட்டிகள்  வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டு இருக்கின்றன.  பாகிஸ்தானை தவிர  மற்ற எல்லா நாட்டு வீரர்களும் இதில் ஆடுகிறார்கள், அல்லது பயிற்சி அளிக்கிறார்கள்.  இப்படி ஏதோ ஒரு வகையில்  உலக  கிரிக்கெட் ஜாம்பவான்கள் இதில்  பங்கெடுத்து   வருகிறார்கள்.

சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு ஐபிஎல் போட்டி ஒரு ஜாக்பாட் தான்.  வருடம் முழுவதற்குமான  வருமானத்தை 2 மாதத்தில் கொடுத்து விடும். இது தவிர அந்த அணி  இறுதிப்போட்டியில்  வெற்றி பெற்றால் கிடைக்கும் பரிசைத்தொகை வேறு.  குறைந்த பட்சம் 10 லட்சத்தில் இருந்து , 27 கோடி ரூபாய் வரை  வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளனர்.

ஐபிஎல் வரலாற்றில்  அதிகபட்சமாக இந்த ஆண்டு  லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக  அந்த அணியின் கேப்டன்  ரிஷப் பன்ட்  ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார். பணம் மட்டுமல்ல,  உலகில் அதிகமான மக்கள் பார்க்கும் கிரிக்கெட்டாகவும் ஐபிஎல் மாறிவிட்டதால் புகழுக்கும் பஞ்சமில்லை.

எனவே   வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் கூட, ஐபிஎல்லில் இடம் பிடித்து விடவேண்டும் என்ற  கனவில் தான் இருக்கிறார்கள்.

இப்படியாக இந்த ஆண்டு 18வது  ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி தொடங்கியது.  போர்சூழல் காரணமாக  சில நாட்கள் நிறுத்தப்பட்டிருந்து,     பின்னர் மீண்டும் மே மாதம் 17ம் தேதி தொடங்கியது.

இந்த ஆண்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. இதுவரை   சிஎஸ்கே, மும்பை இண்டியன்ஸ் ஆகிய அணிகள் மட்டுமே தலா 5 முறை  சாம்பியன் பட்டத்தை வென்று உள்ளது.  கொல்கத்தா 3 முறையும்,  எஸ்ஆர்எச், ராஜஸ்தான்,  டெக்கான், குஜராத்  ஆகிய அணிகள் தலா  ஒரு முறையும் ஐபிஎல் கோப்பையை வென்று இருக்கிறது.

ஆனால் இந்த முறை போட்டியில் சுவாரஸ்யங்களில் ஒன்று…….  என்று  சொன்னால்,  நம்ம சென்னை அணி,  கடைசி இடத்தை பிடித்தது தான்.  5 முறை கோப்பையை  வென்ற   சென்னை  10 வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

மும்பையும் 5 முறை சாம்பியன்  பட்டம் பெற்ற  அணி  தான்.  ஆனால் அந்த அணி நேற்று  ஆமதாபாத்தில் நடந்த  2வது தகுதி சுற்று போட்டியில்,  பஞ்சாபிடம் தோல்வி அடைந்து  வெளியேறியது. இதன் மூலம்  பஞ்சாப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

அதாவது  லீக் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்ற பஞ்சாபும்,  2ம் இடம்  பெற்ற  ஆர்சிபி அணியும் நாளை ஆமதாபாத்தில் இறுதிப்போட்டியில் சந்திக்கின்றன. இதே அணிகள் தான் முதல் தகுதிசுற்று போட்டியில்  மோதி, அதில்  பெங்களூரு  வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

பஞ்சாப் மீண்டும் ஒரு ஆட்டத்தை ஆடி, இறுதிப்போட்டிக்குள்  நுழைந்து உள்ளது. இதற்காக நேற்று ஆமதாபாத்தில் நடந்த  போட்டி ரசிகர்களுக்கு மறக்க முடியாத விருந்தாக அமைந்தது. அந்த  விருந்தை   மழை வந்து கெடுத்து விடுமோ என ரசிகர்கள் மனது திக் ….   திக்….  என அடித்துக்கொண்டது.

அடாது மழை வந்தாலும், விடாது  போட்டி நடக்கும் என்ற  முடிவோடு இரவு 9.45 மணிக்கு தான் போட்டி தொடங்கியது. முதலில்  பேட் செய்த மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது.

பொதுவாக மும்பை அணி 200 ரன்களுக்கு மேல்  சேர்த்து இருந்தால் அந்த போட்டிகளில் எல்லாம்,  அது  வெற்றியே பெற்று இருக்கிறது. அதே சென்டிமென்டில் தான் அந்த அணி இருந்தது.

ஆனால்  பஞ்சாப் அணி சென்டிமென்ட்களை தகர்த்தெறிந்தது.  இரண்டாவது ஆடிய பஞ்சாப் 19 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்புக்கு  207 ரன்களை குவித்து  வெற்றி பெற்று  மும்பைக்கு அதிர்ச்சி அளித்தது.  எப்போதும்   மைதானத்தில் ஜாலி மூடில்  இருக்கும்   மும்பை கேப்டன்   பாண்டியா   இறுதிப்போட்டி கனவு கலைந்ததை  பார்த்து  கண்ணீர் விட்டார்.

அதே நேரத்தில் ஒட்டுமொத்த மைதானத்தையும்  தன் பக்கம் திருப்பி  ருத்ரதாண்டவம் ஆடினார் பஞ்சாப் கேப்டன்   ஸ்ரேயஸ் அய்யர்.   2 விக்கெட்டுகள்   காலியானதும்  மைதானத்தில் இறங்கினார் ஸ்ரேயஸ் அய்யர்.

ஒரு கேப்டனாக தன் பொறுப்பை  உணர்ந்து  நிதானமாக ஆட்டத்தை தொடங்கினார்.  பின்னர் அவரது  பேட்டிங்  சூடுபிடித்தது. ரசிர்களை  இருக்கைகளின் நுனிக்கே கொண்டு வந்து விட்டார் ஸ்ரேயஸ்.   41  பந்துகளில்  87 ரன்களை குவித்தார். இதில் 8 சிக்சர்,  5 பவுண்டரிகள் அடக்கம்.

அவரது பேட் நேற்று  புதிய வித்தைகளை காட்டி,  மைதானத்தை பரபரப்புக்கு உள்ளாக்கியது.  ஒட்டுமொத்த   கிரிக்கெட் ரசிர்களையும் தன் பக்கம் இழுத்தார் ஸ்ரேயஸ் அய்யர்  அவரது ஆட்டத்தின் மூலம் நேற்று இறுதிப்போட்டிக்குள் அணியை கொண்டு சென்றார்.

ஸ்ரேயஸ் அய்யர்  தலைமையில், பஞ்சாப் கிங்ஸ் 2014-க்குப் பிறகு முதல் முறையாக பிளே ஆப்களுக்கு தகுதி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்குள்ளும் நுழைந்தது. , மேலும், ஷ்ரேயஸ் ஐயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாகவும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்திருக்கிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் சாம்பியன் ஆன 2024 சீசனில்,  ஸ்ரேயஸ் அய்யர் தான் கேப்டன் என்பது  குறிப்பிடத்தக்கது. எனவே ஸ்ரேயஸ் அய்யர் ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை   ருசித்தவர் என்பதால் இப்போதும் அவர்   சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. ‘
இதில் நமக்கு இன் னொரு மகிழ்ச்சி  என்னவென்றால், ஸ்ரேயஸ் அய்யரின் தாத்தா சந்தோஷ் அய்யர் தமிழகத்தை சேர்ந்தவர்.
அதே நேரத்தில்  இறுதிப்போட்டியில்  பஞ்சாபை எதிர்கொள்ளும்  அணி  பெங்களூரு.  இந்த அணி இதுவரை  கோப்பையை வென்றது இல்லை.  ஐபிஎல் கிரிக்கெட்டிலும் சரி,  இந்திய கிரிக்கெட்டிலும் சரி   டோனிக்கு அடுத்தாக  ரசிகர்களின் ஏகோபித்த  வரவேற்பை பெற்றவர் விராட் கோலி.
அவர் தொடர்ந்து  பெங்களூரு அணியிலேயே விளையாடி வருகிறார்.   அவர் அந்த அணியின் கேப்டனாகவும் இருந்திருக்கிறார்.   உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருக்கிறார் கோலி. ஆனால்  அவருக்கு இன்னும் ஐபிஎல் கோப்பை கைகூடவில்லை என்பது அவருக்கு மட்டுமல்ல,   கிரிக்கெட் ரசிர்களுக்கும் பெரிய வருத்தமாகத்தான் இருக்கிறது.
இந்த முறையாகவது அவரது   வருத்தமும், ரசிகர்களின் வருத்தமும்  நீங்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.  பெங்களூரு அணி ஐபிஎல் தொடரில் இதுவரை 3 முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. 2009, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில்  இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட அந்த அணி இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என  ரசிகர்கள் பிரார்த்தனை  செய்து வருகிறார்கள்.
 பஞ்சாப்  ஏற்கனவே 2014ல் இறுதிப்போட்டி வரை சென்று  வெற்றி வாய்ப்பை  இழந்த அணி தான்.
எனவே  இந்த போட்டியில்  எந்த அணி வென்றாலும் அது முதன் முதலாக கோப்பையை வெல்லும் அணியாகத்தான் இருக்கும். பெங்களூரு அணியின் கேப்டனாக இருப்பவர்  ரஜத் பட்டிதார். மத்திய  பிரதேசத்தை சேர்ந்த இவரை  21ம் ஆண்டு 20 லட்சத்துக்கு தான் ஏலம் எடுத்தனர். 22ல்  இவர் ஏலமே போகவில்லை.
ஆனால் அவரின் அதிர்ஷ்டம்  22ம் வருடம் பெங்களூரு அணியில்  ஒரு வீரர் உடல் நலமின்றி வெளியேற  பட்டிதார் சேர்க்கப்பட்டார். அந்த வருடம்  அவர் பிளே ஆப் சுற்றில் 112 ரன்கள் எடுத்து  கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்தார். இப்போது  அவர் பெங்களூரு அணியின் கேப்டனாகி,  இறுதிப்போட்டிக்குள் அணியை அழைத்து வந்திருக்கிறார்.
மொத்தத்தில் இரு அணிகளும் கோப்பையை வெல்ல தகுதி வாய்ந்த அணிதான் என்பதில் சந்தேகம் இல்லை. யார்  வென்றாலும் மகிழ்ச்சி தான்.  1
18வது ஐபிஎல் கோப்பையை வென்று ரூ.20கோடி பரிசை வெல்லும் அணி எது என்பதற்கு நாளை இரவு விடை கிடைக்கும்.
அதுவரை   நாமும் ஒரு கிரிக்கெட் ரசிகராக  பரபரப்புடன்  காத்திருப்போம்.
இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், பெங்களூரு அணி வெற்றி பெற்றால்  அந்த வெற்றியை கொண்டாடும் வகையில்  கர்நாடக மாநிலத்திற்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஒரு ரசிகர் முதல்வர்  சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

 

 

error: Content is protected !!