Skip to content

100 நாள் வேலை இல்லாமல் கூலித் தொழிலாளர்கள் அவதி…. தஞ்சையில் மனு…

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் தலைமை வகித்து பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றனர். அந்த வகையில் காருகுடி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தஞ்சை மாவட்டம் திருவையாறு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் காருகுடி ஊராட்சி உள்ளது. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் அதிகம் பேர் விவசாய கூலித் தொழிலாளர்கள்தான். இப்பகுதியில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாகும். இந்நிலையில் திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருவையாறு நகராட்சியுடன் காருகுடி ஊராட்சியை இணைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு 100 நாள் வேலைதிட்டம்தான் உறுதுணையாக உள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வாழ்க்கை நடத்தி வருகிறோம்.

திருவையாறு நகராட்சி உடன் எங்கள் காருகுடி ஊராட்சியை இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் இல்லாமல் கூலித் தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுவர். மேலும் விலையில்லா ஆடுகள், விலையில்லா மாடுகள் வழங்கும் திட்டங்கள் நகராட்சி மக்களாக கிராம மக்கள் மாற்றப்பட்டால் கிடைக்க வழியில்லாமல் போய்விடும். சொத்துவரி, வீட்டுவரி, தண்ணீர் வரி போன்றவை பல மடங்கு உயர்ந்துவிடும். இவற்றை கூலித் தொழிலாளர்களான எங்களால் செலுத்த இயலாத நிலை ஏற்படும்.

இதேபோல் காருகுடி கிராம மக்கள் தமிழக அரசின் இலவச பசுமை வீடுகள், மத்திய அரசின் இலவச வீடுகள் போன்ற திட்டங்களை இழக்க நேரிடும். 100 நாள் வேலை திட்டம் பல ஏழைக்குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. எனவே காருகுடி ஊராட்சியை திருவையாறு நகராட்சியுடன் இணைக்க கூடாது. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!