11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கண்டோன்மெண்ட் BSNL அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
ஓய்வூதியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி BSNL பொது மேலாளர் அலுவலகம் முன்பு, ஓய்வூதியர் அமைப்புகளின் கூட்டு மேடை சார்பில் இன்று நாடு தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் அஸ்லாம் பாஷா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டமான (NPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமான (UPS) ஆகியவற்றை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்த வேண்டும்,

மேலும், 2025-ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும், 2026-க்கு முன்பாக ஓய்வு பெற்றவர்களுக்கும் ஓய்வூதிய மாற்றம் கிடைக்கும் வகையில் 8-ஆவது ஊதியக் குழுவின் விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும், BSNL மற்றும் MTNL நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 2017 ஜனவரி 1 முதல் ஓய்வூதியத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படியின் 50 சதவீதத்தை அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் அடுத்த கட்டமாக செப்டம்பர் 18 ஆம் தேதி தர்ணா போராட்டமும், நவம்பர் 25 ஆம் தேதி பாராளுமன்றம் நோக்கிய பேரணியும் நடத்தப்படும் என ஓய்வூதியர்கள் தெரிவித்துள்ளனர்.
