திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது திருவெறும்பூர் காவல் நிலையம் மற்றும் ஏஎஸ்பிஅலுவலகத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திலும் உள்ளது.
இந்த பகுதியில் முன்பு பேருந்து நிலையம் இருந்தது. அதனால் அந்தப் பகுதியில் பேரூராட்சி கட்டுப்பாட்டில் சுமார் 50 கடைகள் உள்ளது. இதில் அரசு மதுபான கடை மற்றும் அதை சார்ந்த மதுபான பாரும் அடங்கும். இந்த நிலையில் மதுபான பார் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த பகுதியில் இரு சக்கரம், கார், லாரி உள்ளிட்ட மெக்கானிக் கடைகள், லேத் பட்டறைகள், அரிசி கடை பெட்டிக்கடை, வாகனங்களுக்கு சீட் கவர் தைக்கும் கடை என பல்வேறு கடைகள் உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு 17 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கடைகளுக்குள் புகுந்து உள்ளே இருந்த பல லட்ச ரூபாய் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்று உள்ளனர்.
இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளையடிக்கப்பட்ட கடைகளை பார்வையிட்டதோடு கடை உரிமையாளர்களிடம் புகார் பெற்று வருகின்றனர்.
ஒரே நேரத்தில் அதுவும் திருவெறும்பூர் காவல் நிலையம் மற்றும் ஏ எஸ் பி அலுவலகம் அருகே திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

