இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர் பகுதியான பெகாசியில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்தில் 14 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தண்டவாளத்தைக் கடக்க முயன்ற டாக்ஸி ஒன்று பயணிகள் ரயில் மீது மோதியதால், அந்த ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது எனவும் அப்போது அதே தடத்தில் வந்த மற்றொரு ரயில், நின்று கொண்டிருந்த ரயிலின் பெண்கள் பெட்டியின் மீது அதிவேகமாக மோதியதில் இந்த விபத்து நேரிட்டது எனவும் கூறப்படுகிறது. இந்த விபத்தின் தாக்கத்தால் ரயிலின் பெட்டிகள் பலத்த சேதமடைந்தன.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இடிபாடுகளுக்குள் இன்னும் சில பயணிகள் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்து குறித்து இந்தோனேசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
