Skip to content

திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு – கலெக்டர் தகவல்

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், சீருடைகள்  வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது அதன்படி திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசு சையது முர்துசா  மேல்நிலைப் பள்ளியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாணவ மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்கினார். அதைததொடர்ந்து  கலெக்டர் பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7.79 லட்சம் புத்தகங்கள், 1,33,928 சீருடைகள் 2,41,282 புத்தக பைகள் இன்று வழங்கப்பட உள்ளது. இந்தாண்டு அங்கன்வாடியிலிருந்து அரசு பள்ளிகளின் முதல் வகுப்பில் 8500 மாணவர்கள் இணைந்துள்ளார்கள். அது 10 ஆயிரம் வரை செல்லும்.அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை கடந்தாண்டை விட அதிகமாகி உள்ளது. தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக இது வரை எந்த புகார்களும் வரவில்லை. அதிக கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி இடை நிற்றலை தடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தலைமை ஆசிரியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பள்ளிக்கு வராத குழந்தைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பரவும் கொரோனா அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நலமுடன் உள்ளார்கள். இருந்த போதும் தமிழக அரசு கூறியபடி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. பள்ளி ,கல்லூரி வளாகத்தில் இருந்து 300 மீட்டர் வரை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்கிற உத்தரவு உள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும், கடை உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள். கல்வி வளாகங்களை சுற்றிலும் மட்டுமல்லாது தேவைப்படும் இடங்களில் புகையிலை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்போம். பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகள் போக்குவரத்து நெறிமுறைகள் உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த பின் பேருந்து நிலையம் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
error: Content is protected !!