Skip to content

மனோ தங்கராஜ் இன்று மாலை அமைச்சராக பதவியேற்பு

  • by Authour
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி   ஜாமீனில்  வெளிவந்திருந்தார்.  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  ‘‘ஜாமீன் வேண்டுமா, அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை செந்தில் பாலாஜி ஏப்ரல் 28-ம் தேதிக்குள் (இன்று) முடிவு செய்து பதில் அளிக்க வேண்டும்’’ என்று  உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. கடந்த 7-ம் தேதி நடந்த  ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற  அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம்  குறித்து  சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்த சூழலில், அமைச்சரவையில் இருந்து இருவரும் நீக்கப்படுவார்கள் என்று பேசப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் பதவியை பொன்முடி, செந்தில் பாலாஜி இருவரும் நேற்று ராஜினாமா செய்தனர். முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
அமைச்சரவையை 6-வது முறையாக மாற்றம் செய்வது தொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வனம், காதி துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரின் ராஜினாமாவை ஏற்குமாறு ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரை செய்தார். அதை ஏற்று, அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித் துள்ளார். அதன்படி, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருக்கு மின்துறையும், வீட்டுவசதி, நகர்ப்புறமேம்பாட்டு துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனம், காதி துறைஒதுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் ஏப்ரல் 28-ம் தேதி (இன்று) மாலை 6 மணிக்கு பதவிபிரமாண நிகழ்வு நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முதல்வரின் பரிந்துரையை, ஏற்று பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்படுகிறார் என்றும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள மனோ தங்கராஜுக்கு, தற்போது ராஜகண்ணப்பனிடம் இருக்கும் பால்வளத் துறை மீண்டும் ஒதுக்கப்படுகிறது.  இதனால்  ராஜகண்ணப்பனிடம் இருந்து பால்வளம்   திரும்பப்பெறப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை கடந்த 2024 செப்டம்பரில் மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு துணைமுதல்வர் பதவி வழங்கப்பட்டது. அப்போதுதான் செந்தில் பாலாஜியும் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். மனோதங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டு, நாசர், கோவி.செழியன்,  சேலம் ராஜேந்திரன் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். மனோ தங்கராஜ் இன்று மாலை 6 மணிக்கு  ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்கிறார். இந்த நிகழ்ச்சியில்  முதல்வர்  ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
   
error: Content is protected !!