பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு இன்று சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு தமிழ்நாடே வரவேற்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலி்ன் கூறியிருப்பதாவது:
அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 9 குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பொள்ளாச்சி பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்துள்ளது. சாகும்வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டதை வரவேற்கிறேன் என்று கூறி உள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:
எங்கள் ஆட்சியில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு, எங்களால் அமைக்கப்பட்ட சிபிஐ விசாரணையில் குற்றவாளிகள் உறுதி செய்யப்பட்டு , இன்று கடுமையான தண்டனைகளை அவர்கள் பெற்றிட காரணமாக அமைந்தது அதிமுக அரசு. இந்த வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி இன்று கிடைக்கப்பெற்றுள்ளது.திமுக-வைப்போல் அரசியலுக்காக அவதூறுகளை அள்ளித் தெளிக்கும் அற்ப புத்தி எங்களுக்கு இல்லை. எங்களுக்கு மடியில் கணமில்லை; வழியில் பயமில்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றினோம்.
இவ்வாறு அவர் கூறினார். இதுபோல டாக்டர் அன்புமணி ராமதாஸ், தவெக தலைவர் விஜய் உள்பட அனைத்து கட்சித்தலைவர்களும் தீர்ப்பை வரவேற்று உள்ளனர்.
