காரைக்கால் – பேரளம் இடையே உள்ள 23 கி.மீ. தொலைவுக்கு 1898-ம் ஆண்டு மீட்டர்கேஜ் ரெயில் பாதை அமைக்கப்பட்டது. 87 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த இந்த தண்டவாளத்தில் இயக்கப்பட்ட ரெயில்கள் மூலம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வந்தனர். மேலும், ஐஸ், மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்லவும் ரெயில்கள் பயன்படுத்தப்பட்டன. என்றாலும், போதிய வருவாய் இல்லை என்று கூறி 1987-ம் ஆண்டு ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
மீண்டும் கடந்த 2011-ம் ஆண்டு நாகூர் – காரைக்கால் இடையே 10.5 கி.மீ. தொலைவுக்கு புதிதாக அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு, ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த ரெயில் பாதையை பேரளம் வரை நீட்டிக்க வேண்டும் என்று திருநள்ளாறு வரும் பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து, காரைக்கால் – பேரளம் இடையே23 கி.மீ. தொலைவுக்கு அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், 8 பெட்டிகள் கொண்ட ரெயில் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது.
இன்று இந்த பாதையில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. காரைக்கால் – பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மய அகல ரெயில் பாதையில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் முதன்மை தலைமை மின் பொறியாளர் முன்னிலையில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, குறிப்பிட்ட நேரத்தில் இந்த ரெயில் பாதையை யாரும் கடக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்
இதனை முன்னிட்டு, காரைக்கால் – பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மய அகல ரெயில் பாதையில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் காலை 10 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
