Skip to content

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.. 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அவ்வாறு தொடங்கினால், கேரளாவில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கத்தைவிட ஒரு வாரத்துக்கு முன்னதாகவே பருவமழை தொடங்கியதாக அமையும். கடந்த  2 நாட்களாகவே அரபிக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இதனால் அங்கு பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது, பருவமழைக்கு முந்தைய மழைப்பொலிவும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவருகிறது. இந்நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்துக்குள் தொடங்குவதற்கான அனைத்து சாதகமான சூழலும் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு, கேரளாவில் மே.23-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. 1918-ம் ஆண்டு மே.11-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியதுதான், கேரள வரலாற்றிலேயே தென்மேற்கு பருவமழை மிகவும் முன்கூட்டியே தொடங்கியதாக இருக்கிறது. அதேபோல் 1972-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி தொடங்கியதுதான் மிகவும் தாமதமான தொடக்கமாக இருக்கிறது. வழக்கமாக ஜூன் 1-ம் தேதிதான் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் நிலையில், 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு உள்பட 7 மாவட்டங்களில் சில பகுதிகளில் இன்று மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி உள்பட 7 மாவட்டங்களிலும் சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 25, 26 ஆகிய தேதிகளில் கேரளாவில் எல்லா மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடல் கொந்தளிப்பு காணப்படும் என்பதால் கேரளா, லட்சத்தீவு கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எல்லா முன்னெச்சரிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
error: Content is protected !!