பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அன்புமணியை கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாகவும், அவரை செயல் தலைவராக ஆக்கி விட்டதாகவும் ராமதாஸ் கூறினார்.தொடர்ந்து தந்தை, மகன் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று பாமக நிறுவனா் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கண்ணீர்மல்க கூறியதாவது:
அன்புமணி மீது ஒளிவுமறைவின்றி குற்றசாட்டுகளை வைக்கிறேன். போகிற போக்கில் குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை. ஆதாரத்துடன் சொல்கிறேன். நான் செய்த சத்தியத்தையும் மீறி, அன்புமணியை 35வது வயதிலேயே மத்தியில் கேபினட் அமைச்சராக்கினேன். அது தான் நான் செய்த தவறு. ஆழகான ஆளுயர கண்ணாடியான பாமக கட்சியை ஒரு நொடியில் உடைத்துவிட்டார். மேடை நாகரீகம் தெரியாதவர். பொதுக்குழு மேடையில் மைக்கை தூக்கி என் தலையில் போடுவது போல போட்டார். தலைமை பண்பு கொஞ்சம் கூட இல்லாதவர், உறுப்பினர்களின் பேச்சை கேட்பதில்லை.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உடன் வளர்த்த கட்சியில் கலகத்தை ஏற்படுத்தினார். வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போல பாய்கிறார். பாட்டிலால் பெற்ற தாயை அடிக்க முயன்றாார் அன்புமணி, வளர்த்த கடா, மார்பில் வீறுகொண்டு தாக்கியதில் நிலைகுலைந்து போனேன்.
கட்சி வளர்ச்சிக்கு பல இடையூறுகளை செய்தவர். தற்போது மக்களையும், கட்சி தொண்டர்களையும் திசை திருப்பி அனுதாபம் தேட முயற்சிக்கிறார். ஜி.கே. மணியின் மகன் தமிழ்க்குமரனுக்கு பதவி வழங்க தடையாக இருந்தவர் அன்புமணி. பொதுக்குழு கூட்டத்திற்கு குடும்பத்துடன் வந்த தமிழ்க்குமரனை கூட்டத்திற்கு வரக்கூடாது என கூறினார். யார் வளர்த்த கட்சிக்கு யார் உரிமை கோருவது? மாவீரன் குருவை கீழ்த்தரமாக நடத்தியவர் அன்புமணி.
அன்புமணிக்கு உதவியாகவே முகுந்தனை இளைஞரணி செயலாளர் ஆக்கினேன். அதை ஏற்க மறுத்தார். மேடை நாகரீகம் இல்லாமல் காலை ஆட்டிக்கொண்டு இருந்தார். தவறான ஆட்டத்தை தொடங்கி அடித்து ஆடினார். என்னை குற்றவாளியாக்கி அனுதாபம் தேட முயற்சிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.